Subscribe:

Pages

Sunday, June 5, 2011

சேக்கிழாரும் ஐன்ஸ்டீனும்


சேக்கிழார் திருக்கோயில்: குன்றத்தூர், சென்னை 

அலகில்  சோதியன்  அம்பலத்தாடுவான்: சேக்கிழாரும் ஐன்ஸ்டீனும்  

உலகெலாம்  என இறைவன் முதற்சொல்  எடுத்தளிக்க 

உலகு எலாம் உணர்ந்து  ஓதற்கரியவன் 
நிலவு உலாவிய நீர்மலி வேணியன் 
அலகில்  சோதியன்  அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்    

எனத் திருமலைச் சருக்கம் எனும் முதற்காண்டத்தின்முதற்பாடலாய் எழுந்து பெரிய புராணத்தின், துவக்கத்தை அறிவிக்கும் சேக்கிழாரின் இப்பாடல், ஒரு மாபெரும் அறிவியல் களஞ்சியமாகத் திகழ்கின்றது. 

நிலவு பூமியின் துணைக்கோள் - முக்கால்  பங்கு நீரால் அமைந்துதது பூமி -
இத்தகைய பூமியில்  உறையும், உணர்வுத் திறன் கொண்ட யாவும்  உணர்ந்தும் - உணர்ந்து கொண்டதை விரித்தும் ஓதுதற்கு அரியதானது இறைவன் எனும்  பரம்பொருள் - அப்பரம்பொருளை அளக்கும்  அலகு யாதெனில் அது ஒளியே! இவ்விதமான தன்மையுடைய பரம்பொருளான  ஈசன் அம்பலத்தில் ஆடுகின்றான்!! சிலம்பணிந்த அவனது மலர்ப் பதங்களை வாழ்த்தி வணங்குவம்!! --- இது இப்பாடலின் பொருள்.  

அறிவியல் விதிப்படி, பிரபஞ்சத்தின் இயக்கங்கள்  யாவுமே ஒளியின் வேகத்தை  அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அளவிடப்படுகின்றன.
ஐன்ஸ்டீனின்  சார்புக் கோட்பாடு  (Theory of Relativity)  புவியில் இயக்ககங்களின்  கூறுகளுக்கு, ஒளியின் வேகத்துடன் தம்மை ஒப்பிடும் தன்மை (Relative value)  மட்டுமே உண்டு  ஆனால் அவற்றிற்கென்று தனித்துவ அளவும் மதிப்பும் (Absolute value) கிடையாது -- என்று கூறுகிறது.

ஒளிவடிவான பரம்பொருள் அம்பலத்தில் ஆடுகிறது என்பதே அறிவியல் மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டும் பேருண்மை. Space எனப்படுகின்ற வெட்டவெளியில் இப்பரம்பொருள்  ஓரிடத்தில் தேங்கிவிடாமல், எல்லாத் திசைகளிலும், தூசு தும்பு முதல், கோள்கள் ஈறாக, உயிருள்ளது உயிரற்றது என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்தையும் ஆட்டிவைக்கிறது என்பது அறிவியல் கூறும் உண்மை. 

உயிருள்ளதா உயிரற்றதா என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பொருட்களின் அணுவிலும் எலெக்ட்ரான்கள் ஓயாமல் வலம் வந்து கொண்டே இருக்கின்றன!!

உயிரற்றப்  பொருட்களில் Potential Energy எனப்படும் இருப்பு ஆற்றலும், உயிருள்ளப் பொருட்களில் Kinetic Energy எனப்படும் இயக்க ஆற்றலும் பொதிந்திருப்பதை அறிவியல் காட்டுகிறது. 

அம்பலம் எனும் தமிழ்ச் சொல் "Space"  எனப்படும் வெளியைக் குறிக்கிறது. தில்லை நடராஜர் ஆலயத்தில், திரைக்குள் நுழைந்து பரம்பொருளின் ரகசியத்தை அண்ணாந்து வெட்டவெளியில் காணும்  சூத்திரம், தமிழ்ப் பெரியார்கள் எத்தனை அறிவியல் ஞானத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.
தாமிரசபை, பொற்சபை என்று இறைவனுக்கு திசைகள் தோறும் அம்பலம் அமைத்து  வெட்டவெளியில் பரம்பொருள் நிகழ்த்தும் இயக்கத்தில், நமது இயக்கம் ஒரு அங்கம் - என ஒவ்வொவொரு நாளும் நமக்கு நினைவூட்டும் வித்தகம் எண்ணுந்தோறும் நமக்குள் பரவசத்தை ஏற்படுத்துகிறது. 

"ஆதிபகவன் முதற்றே  உலகு" எனப்  பொய்யாமொழிப் புலவர் கூறிய வாசகம் இங்கே ஒப்புகூறத்தக்கது   

நடராஜர் தத்துவம் எனபது ஆழ்ந்து உணரத்தக்கது. காலைத்தூக்கி நின்றாடும் நாடும் தெய்வம் காட்டுவது, நிற்பது என்பது மரணத்திற்கு ஒப்பானது - இயக்கம் மட்டுமே வாழ்வாகும் என்பதே -- அதுவும் நமது இயக்கத்தில் - வேகம் இருக்கும் வேளையில் - நடுவு நிலைமை வேண்டும் - என்பதை - ஒருகாலைத்தூக்கிய  பாவனையில் உணர்த்தப்படுகிறது.

இரவு நீங்கி ஒளிபுகும் காலையில் உலகின்  இயக்கங்கள் எழுப்பும் ஒலியும், தாவரத்தொகுதிகளின், மலர்ச்சியும், இங்கும் அங்குமாய்ப்பாயும் பறவைகளின் தாவலும் காட்டும் காட்சி  அப்பப்பா! சொற்கள் போதா விவரிக்க!!


ஆற்றல் மாறாவிதிக்கு வித்திட்ட லவோய்சியர் 

அடியும் முடியும் இல்லா அண்டவெளியில் நின்ற வாக்கில் பூமியின் மீது பதியாப் பாதங்களுடன், பரம்பொருள் விளைக்கும் ஒரு சிறு நாட்டிய அசைவு - எத்தனைப் பேரின்பமான ஒலிஒளிக் காட்சிகளை உண்டாக்குகின்றது!! 
மலர்ச் சிலம்படி என்பது இந்த அற்புத நாட்டிய அசைவையன்றோ?


ஒளியால் மட்டுமே அளவிடக்கூடிய ஈசனின் படைப்பாற்றலில் நாமும் ஒரு அங்கம் என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தோமென்றால், நாம் தேக்கநிலையை மறுத்தும் விடுத்தும் செம்மையாய் இயங்கலாவோம். 

எனது பள்ளிப் பருவத்தில் ஆரம்பப் பள்ளியில்  நாள்தோறும் நாங்கள் பாடிய பிரார்த்தனைப் பாடல் என் காதுகளில் இப்போது ஒலிக்கிறது-
சூரியன் வருவது யாராலே?
சந்திரன் தெரிவது எவராலே?
வானில் மின்னும் மின்மினி போல் கண்ணில் தெரிபவை அவை  என்ன?
பேரிடி மின்னல் எதனாலே? பெருமழை பொழிவது யாராலே?
யாரிதற்கெல்லாம் அதிகாரி?
அதை  நீ அறிந்திடல் வேண்டாமோ?

பரம்பொருள் வெட்டவெளியில் பறந்து விரிந்த வகையில் வியாபித்திருப்பதை நம் ஆன்றோர் எடுத்துக் கூறியிருப்பதும், இறைவனோடு ஐக்கியமாவதை வாழ்நாள் பயனாகக் கருதுவதும், திரண்ட அறிவியல் கருத்துக்களாகும் என்பதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பயன்பெறுவது சிறப்பு. 

Law of Conservation of Energy எனப்படும் ஆற்றல் மாறா விதியையும்,  First Law of Thermodynamics எனப்படும் வெப்ப இயக்கத்தின் முதல் விதியையும் வெட்ட வெளியும் இயங்கும் பரம்பொருளும் நமக்குக் காட்டுகின்றன என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெப்ப இயக்கத்தின் முதல் விதியை வழங்கிய ஹெல்ம்ஹோல்ட்

மறுபிறவி எனும் அசைக்கமுடியாத கோட்பாடு நமது தமிழ்ச்சமய வழக்கில் இருப்பது, அறிவியல் சிந்தனைகளில் நாம் எத்தனை உயர்வாய் விளங்கி வந்திருக்கின்றோம் எனபதற்கு மற்றுமொரு சான்று.
       
நமது உடலும் உயிரும் ஆற்றல் பெட்டகங்கள், மரணமெனும் நிகழ்வால் இந்த ஆற்றல் அழிந்து போக வாய்ப்பில்லை. எவ்வகையிலேனும் இன்னொரு வடிவு (form) இந்த ஆற்றலுக்குத் தேவை. எனவே மறுபிறவி என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதே!! (மனிதர்கள் இறக்கும்போது ஒளிவடிவாக உயிர் பிரிவதைப் பல சமயங்களும் நம்புகின்றன. பல திரைபடங்களில் இவ்வாறான உருவகத்தையும் நாம் காண்கிறோம்). 

தொடர்ந்த பிறவிகளால் இயக்கங்கள் செம்மைப்பட்டு மேன்மை அடைந்த நிலையில், இறுதியாக  தனிமனித ஆற்றலானது ஆண்ட வெளியில் நிறைந்த பரம்பொருளோடு இரண்டறக் கலந்து விடுகிறது என்பதை, வீடு பேறு, மோட்சம், எனப் பல வகைகளில் நமக்கு உணர்த்தும் நம் முன்னோரின் விவேகத்தை என்னென்று சொல்வது? மனிதர்கள் இறப்பதை,  "இயற்கை எய்தினார்", "இறைவனுடன் இரண்டறக் கலந்தார்," "ஈசன் பாதம் சேர்ந்தார்" என அழகாக வருணிக்கும் தமிழ்ப் பதங்களுக்கு எத்தனை வணக்கம் செலுத்தினாலும் தகும்.   
பரம்பொருள் எனும் சித்தாந்தம் அறிவியலில், உலகின் முதலும் இறுதியுமான ஆற்றல் கருவூலத்தைக் (the Ultimate Reservoir of Energy) குறிக்கிறது. இந்தக்  கருவூலத்திலிருந்து எடுக்கப்படும் ஆற்றல் எவ்வாறேனும் , எந்தக் காலநிலை யிலேனும் மீண்டும் இந்தக் கருவூலத்தை அடைந்தாக வேண்டும். ஆற்றல் மாறா  விதியின் அடிப்படைக் கோட்பாடு இதுவே (energy can neither be created nor destroyed but can be  transformed from one form to the other) !! வெப்ப இயக்கத்தின் முதல் விதியும் இதுவே (The total energy of the universe is constant). மறுபிறவி என்பது ஆற்றல் வேறு  உருவத்துக்கு மாறும் எளிய நிகழ்வாக எண்ணுதல் எளிமையான அறிவியல் சிந்தனை.

திருவாசகம், "போக்கும் வரவும் இலாப்  புண்ணியனே என ஈசனை" விவரிப்பதும், "விண்ணிறைந்து - மண்ணிறைந்து - மிக்காய்  விளங்கொளியாய் - எல்லை இலாதானே" என்று போற்றுவதும்  இங்கு நினைந்து  உணரத் தக்கது. 

  
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்  -இறைவனடி சேராதார்  
என்றாரே வள்ளுவர். இந்த உலகப் பொதுமறை, பிறவிகளுக்கு இறுதியாய் இறைவனடியை  குறிப்பிடுவது, சேக்கிழாரின் மலர்ச் சிலம்படிதானே?


  ஆற்றல் - பொருண்மை வாய்ப்பாடு தந்த ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீனின் ஆற்றல் - பொருண்மை வாய்ப்பாடு அல்லது சூத்திரம் (Einstein's Mass--Energy equation)
E = mcc

என்பதாகும். இதில் c என்பது ஒளியின் வேகத்தைக் குறிப்பதாகும். எனவே  நபர் எவராகினும் சரி - அவரது தோற்றமும் இயக்கமும் ஒளிபொருந்தியதாக - அறியாமை எனும் இருளிலிருந்து விடுபட்டதாக - தனது மற்றும் பிறரது வாழ்வுக்கு வெளிச்சம் தருவதாக - உயர்நிலைகளுக்கு இட்டுச்செல்வதாக - பரம்பொருள் எனும் பிரபஞ்சப் பேராற்றலை உணர்ந்து போற்றுவதாக - அமைய வேண்டும் என்பது அடிப்படை. 

"தோன்றிற் புகழோடு தோன்றுக" என்ற வள்ளுவரின் உறுதியான் கட்டளையைக்  காண்க.

பாரதியின் ஊழிக்கூத்து பிரபஞ்ச இயக்கத்தின் இன்னபிற பரிமாணங்களை நமக்களிக்கும் இன்னுமொரு கருவூலம். 

ஊழிக்கூத்து பற்றிப் பேசுவோம்.  

    



   

              

0 comments:

Post a Comment