Subscribe:

Pages

Saturday, January 15, 2011

நாம் விடாது கடைபிடிக்க வேண்டியது போகிப் பண்டிகை

போக்கிப் பண்டிகை

நாம் விடாது கடைபிடிக்க வேண்டியது போகிப் பண்டிகை 

பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும். பண்டைமரபு  விட்டுப்போகாமல் தொடர்ந்துவரும் ஒரே பண்டிகையாக, போக்கிப் பண்டிகையாம் "போகி" விளங்கிவருகிறது. இப்பண்டிகையின் முக்கியத்துவத்தை நம்மில் பலரும் புரிந்து கொள்ளவில்லை.

போகிப் பண்டிகை ஏன் வந்த்து என நாம் ஆராய்ந்தோமேயானல், அது மூட நம்பிக்கையன்று மாறாக அது ஒரு உயர்ந்த சமுதாய ஏற்பாடு என்பது நமக்குப் புரியும்.  

தெரிந்து கொள்ளுங்கள்
"சுத்தம் சுகம் தரும், சுத்தம் சோறு போடும்" என்று வாய்வழியாகச் சொல்லியதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு வீட்டிலும்  அதனைக் கட்டாயம், நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற  உறுதியோடு ஒருங்கிணைந்த தூய்மைப் பணியினை ஒட்டுமொத்த மக்களும் ஒரேநேரத்தில் செய்ய்யவேண்டும் என்பதற்கான ஏற்பாடுதான் போகிப் பண்டிகை.

குறிப்பாகச்  சொல்ல வேண்டும் என்றால்   தொற்றுநீக்கம் வீடுதோறும்  செய்யப்படவேண்டும் என்பதில் அசைக்கமுடியாத ஒற்றுமையை மக்கள் அனைவரும் போகியிலே காட்டினர்  எனபதே  போக்கிப் பண்டிகையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் மிகச்சிறந்த பாடமாகும். சமுதாயத்தில் தொற்றுநீக்கம், வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமெனில்  அதை ஒரே சமயத்தில், சமுதாயத்திலுள்ள அனைவரும் தெரிந்தெடுத்த ஒரு வழிமுறையின் மூலம் ஒன்றுபோல் செய்யவேண்டும்  என்கிற ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டம்  (Integrated  Sanitation Movement) தான் போக்கிப்  பண்டிகையின்  அடிப்படையாகும்.

இதனை நமது  முன்னோர்கள் செய்துகாட்டியவிதம் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது! வீட்டிலே முக்கியமாகத் தொற்றுக்கள் வளரும் மூலவாய்களை அவர்கள் அடையாளம் கொண்டு அவற்றை  அறிவியல் முறைப்படி அழித்து, தனி வீடு மற்றும் பொதுச் சுகாதாரத்தை நிலைநிறுத்தினர். 

தலையணை, படுக்கைப் பொருட்கள், பாய், துடைப்பம், கால்மிதிக்கும் கோணிப்பைகள்மிகக்குறிப்பாக, பழைய உள்ளாடைகள், பெண்கள் பயன்படுத்திவந்த தீட்டுத்துணி, இனிமேல் துவைத்தாலும் அழுக்கு நீங்காது  எனும்படியாய்ப் பழையதாகிப்போன  கைத்துடைப்பான்கள், கந்தைகள், அடுப்படியில் தொடர்ந்து பயன்படுத்தியதால் தேய்ந்து போன (அதனால் கழுவ இலாயக்கற்றுப்போன) அகப்பைகள், மரத்தட்டுக்கள். தொழுவ எச்சங்கள்,ஆகியனவற்றை எரித்துப்  பொசுக்கி அவற்றில் தேங்கிச் செறிந்து நின்ற அனைத்துத்   தொற்றுக்களையும், நம் முன்னோர்  நீக்கினர் என்பது பேருண்மை.

 ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டம் எனும்போது, அது முழுமையாய் அமையவேண்டும், என்பதிலே நமது முன்னோர்களுக்கு இருந்த சிரத்தையும் பொறுப்புணர்ச்சியும் நம்மை வியப்படைய வைக்கின்றது.

வீட்டின் தரை மற்றும் சுவர்களில் உள்ள ஓட்டைப் பொத்தல்களை அடைத்து, வெள்ளையடிப்பது, வாயிற்படிகளை மராமத்து செய்து  வண்ணமடிப்பது,    வீட்டுவாசலை மண்ணடித்து உயர்த்துவது என்கிற ஒவ்வொன்றுமே ஒருங்கிணைந்த சுகாதாரத்திட்டத்தின் கூறுகளாகும். 

பாக்டீரியாக்கள் சேர்ந்த பொருட்கள், வைரஸ் தோற்றுவாய்கள், ஆகியனவற்றை ஒழிக்கவேண்டுமேன்றால், Incineration என்று நாம் அழைக்கும் எரியூட்டலே  மிகச்சிறந்தவழி என்கிற  அறிவியல் பேருண்மையை  அவர்கள் அந்நாளிலேயே அறிந்திருந்தார்கள் என்பது மட்டுமல்லாது vectors என்று நாம் இன்று அழைக்கக்கூடிய  தொற்றுக்களைப் பரப்பும்  ஊடகங்களை வளரவிடாது கவனித்து அவற்றை மட்டுப்படுத்தவேண்டும் என்றும் அவர்கள் மிகநன்றாகவே அறிந்துவைத்திருந்தார்கள்.  நுண்ணுயிரிகளின் ஊடகங்களான மூட்டைப் பூச்சி, எலி, பெருச்சாளி. கொசுஉண்ணி, சீலைப்பேன், ஆகியனவற்றை காலத்தே ஒழிப்பது என்கிறது என்கிற ஒழுங்குக் கட்டுப்பாடு "போக்கி" பண்டிகையை அனுசரிப்பதன் மூலம் கட்டாயமாக்கப்ப் பட்டது எனலாம். 

அந்நாளையக் காலகட்டத்தில், மனிதர்கள் வாழும் வீடுகளில் கால்நடைகள் தவிர்க்கமுடியாத அங்கமாக, விளங்கிவந்த நிலையில், அவற்றின் சுகாதாரத்தை மிகுந்த சிரத்தையுடன் கவனித்துத் தொழுவத்தை மராமத்து செயவதோடு நின்றுவிடாமல், கால் நடைகளை முழு அக்கறையுடன் சுத்தம் செய்து, தொற்றுக்கள் சேரும் மூலவாய்களான கொம்பு, மற்றும் கொளம்பு  இணுக்குக்களைத்  தூய்மைப்படுத்தி, உரசல் மற்றும் சிராய்ப்புக்களால் அடிக்கடி சேதாரப்படும் கொம்புகளுக்கு  புறப்பரப்பு கெடாமலிருக்க வண்ணம் தீட்டி, அவற்றின் தோலிலே உள்ள புண்,  உண்ணிகள் ஆகியனவற்றைக்  கவனித்து உரிய சிகிச்சையளித்து     தூய்மைக்குத் தூய்மை, அழகுக்கு அழகு எனும்படியாக  அலங்கரித்துச்  சுகாதாரம் காத்த அக்காலக் கட்டுப்பாட்டை எவ்வாறு பாராட்டுவது?

இன்று விலங்குகளின் நலம் பற்றி அதிகம் பேசுகிறோம். அனால் அன்றே இதனை நம் முன்னோர்கள்  நடைமுறைப்படுத்தியிருந்தார்கள்!  நமக்காக மட்டுமே வாழ்ந்து, வாழ்நாள் உழைப்பையும் நமக்காகவே அளிக்கும் கால்நடைகள்வேலையற்ற உல்லாசமான ஒய்வு நாள்  ஒன்றை  அனுபவிக்கவேண்டும். அக்கால்நடைகள், ஊரைவேடிக்கப்பார்த்தபடி, ஓடிவிளையாடி மகிழ்வுறவேண்டும், இளைப்பாரவேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் மாட்டுப்பொங்கல், இதற்கானத்  தயாரிப்பிற்கு, போக்கிப் பண்டிகையிலே பிள்ளையார் சுழி போட்டுவிடுவார்கள். 

சொல்லப்போனால், இன்று நாம் மேலாண்மையிலே எடுத்தாள்கின்ற சித்தாந்தங்களை அன்றே நடைமுறையாக நிலைப்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள் என்பதே சரி.

இந்த ஏற்பாடுகளின் உண்மைப்பொருளை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். மூடநம்பிக்கைகள் யாவை, உறுதியான ஏற்பாடுகள் யாவை என்பதை அடையாளம் கண்டு, சிறப்பானவற்றை நாமும் விட்டுப்போகாமல் சரியானப் புரிந்துகொள்ளளோடு கடைபிடித்து வரவேண்டும்.

போகிப் பண்டிகை என்றால் குப்பைகொளுத்துவது என்று குருட்டாம்போக்காக எண்ணிக்கொண்டு, டயர், ப்ளாஸ்டிக், மற்றும்  தர்மொகோல் எச்சங்களை எரிப்பது நாம் செய்த குறைபாடே தவிர, போகிப் பண்டிகையின் குறைபாடன்று.
     
இன்று நாம், நம் பெரியவர்களின் சிந்தனையை புரிந்துகொண்ட வாக்கில், நம்முடைய இன்றைய சூழ்நிலைக்கு  ஏற்றார்ப் போன்ற ஒருங்கிணைந்த சமுதாயச் சுத்திகரிப்பு மற்றும் தொற்று நீக்கலை மேற்கொள்ள வேண்டும். போகி சொல்லும் சமுதாயச் சிந்தனையை, நம்மில் படித்தவர் பலரும்பிறருக்கு, மிகக் குறிப்பாகக்  குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல  வேண்டும். இதை நாம் தப்பாமல் செய்தோமேயானால் அதுவே நாம் நம் முன்னோர்களுக்குச்  செய்யும்  நன்றி  நவிலலாகும்.   
 

மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்பதும் கூட  விலங்கு-உளவியலின்  வெளிப்பாடாகும்.  விலங்குகளுக்குள்ளே பொதிந்துகிடக்கின்ற திறமைகள் வளர்க்கப்படவேண்டும், மாக்களும் மக்களிடைய தம் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு தரவேண்டும் என்கிற பரந்துபட்ட உயிரியல் சிந்தனை  நம் முன்னோர்களின் ஒரு சீரிய பழக்கமாக இருந்தது என்பதை நாம் அறியுமாறு விளக்குவன அவர்கள் ஏற்படுத்திய பொங்கல் போன்ற பண்டிகை.

இனியொரு விதிசெய்வோம் அதை  எந்த நாளும் காப்போம் எனும்படியாக, பண்டிகைகளை விடாது கொண்டாடுவோம், சரியான புரிந்துகொள்ளலோடு கொண்டாடுவோம் என உறுதி கொள்வோமா?  

    



.








 
 
 




     

 
 












 

0 comments:

Post a Comment