Subscribe:

Pages

Saturday, April 30, 2011

இலக்கியவட்டத் தலைவராக, பொறுப்பாசிரியராக

இலக்கியவட்டத் தலைவராக, பொறுப்பாசிரியராக 

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியவட்டத் தலைவராக, என்னை ஆக்கிப் பார்ப்பதில்,  மிகுந்த ஆர்வத்தைக் காட்டியவர்கள் இருவர்: திரு சந்த் குப்புசாமி அவர்கள்;   திரு இரவி பழனியப்பன் அவர்கள். 

திரு சந்த் குப்புசாமி அவர்கள் கடந்த ஆண்டு சங்கத்தின் தலைவராக  இருந்தவர்.  திரு இரவி பழனியப்பன் அவர்கள் கடந்த ஆண்டு சங்கத்தின் துணைத் தலைவராகவும், இவ்வாண்டு, சங்கத்தின் தலைவராகவும் இருப்பவர். 

காட்சிக்கெளியன்  கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்
என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப   அடக்கமாய், அன்பாய், எளிமையாய் எங்களுக்குள் வளையவரும் இரவி அவர்களின் தலைமையில் பலப் பல புதுமைகள் நிகழ்ந்தேறி வருகின்றன. 

குறிப்பாக, எமது வசந்தமலர் புத்தொளி பெற்று, புதுவடிவில் வெளிவருவதற்கு இவரது தலைமைப் பண்புகளே முதற்காரணம் என்பேன். என்னைப் பொறுப்பாசிரியராக்கி,  காரியத்தில் குறியாயிருக்கும் ஒரு குழுவைக் களத்தில் இறக்கி இவர் தலைமையிலே  பற்பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

உலகின் புகழ்பெற்ற வெளியீடுகளின் வடிவத்தை சவாலுக்கு அழைக்கும்படியான "லே அவுட்" (ராம் மோகனின் கைவண்ணத்தால்) கொண்டு,  காலம் தப்பாது மொட்டவிழும்   வசந்த மலரின் மணத்தை  எவரும் நுகரும்படியாக வசதி செய்திருக்கும் இந்தப் புதிய ஏற்பாட்டின் சிற்பி, இப்புதியக் குழுவின் நாயகன், இரவி பழனியப்பன் அவர்களே.  





இயக்கம் என்றால் இதுவன்றோ இயக்கம் எனும்படியாக இயங்கும் வசந்தமலாரின்  குழு பற்றி  நாம் பேசுவோம்.

 
 

என்னம்மா எப்படி இருக்கே? டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்

என்னம்மா எப்படி இருக்கே?-  டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்

அத்தனைச் சன்னமானதொரு குரல், தொனிக்கும் விதத்திலும், கண்கள் கொடுக்கும் இதத்திலும் அவர் இளைய விஞ்ஞானிகளை எத்ததனை நேசிக்கிறார் என்பதனைக் காட்டும். 

முகத் தோற்றமாகிலும் சரி, பார்வையாகிலும் சரி, வார்த்தையாகிலும் சரி. இணக்கம் என்றால் அத்தனை  இணக்கம். அவருக்கு இவையெல்லாம்  பிறவிப் பண்புகளாகவே  அமையப் பெற்றன எனறே தான் எண்ணத் தோன்றுகிறது. 

இம்மாமனிதரின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் ஞானம் பிறக்கும், அந்த ஞானம் அலட்டலில்லாமல், ஆர்பாட்டமில்லாமல்  கனிவாய்த் தீண்டி,  தண்மையைக் கக்கினாலும் எனக்குள் அது ஒரு ஆர்வப் பிரவாகத்தையே  கிளப்பும். 

மோனம் என்பது ஞான வரம்பு என்றார் ஔவையார். சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லைஎன்பார்கள். 

இடையிடையே மோனமும், தேர்ந்தெடுத்துக் கையாளும் மாணிக்கவார்த்தைகளுமாக,  அமைதியாக நடமாடும் ஒருகாப்பியமாக இளைய உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்  டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள். 

சுயமாய் உழைப்பதில் இவர்காட்டும் உறுதி கண்டு என்னை நானே பலமுறை உரைத்துப் பார்த்து, உருப்படியாய் உழைக்கின்றேனா எனத் தரப் பரிசோனைசெய்து கொண்டிருக்கிறேன்
.


என்னை எங்கு கண்டாலும்  "என்னம்மா எப்படி இருக்கே?"  என்றவாறு  அவர் வரவேற்பு தரும் அந்த நேசம் எனது பாக்கியம்.
        

Friday, April 29, 2011

நள்ளிரவு பயங்கரம்: சுழற்றி வீசிய சூறாவளி

நள்ளிரவு பயங்கரம்: சுழற்றி வீசிய சூறாவளி 

நேற்று இரவு தூங்கிக்கொண்டிருக்கிறோம். எச்சரிக்கை சைரன் வாசலில் பெரிய அளவில் ஒலிக்கிறது. பாதுகாப்புப் பகுதிகளுக்கு நகர்ந்துவிடுமாறு எமக்கு அறிவுறுத்தல். வாரிச்சுருட்டி எழுந்து நான் படக்கென ஜன்னலின் "ப்ளைண்டை" திருகித் திறக்க வெளியிலோ மழை.  இடிஎன்றால் அப்படியொரு இடியை நான் வாழ்க்கையில் கேட்டதில்லை - அப்படிப்பட்ட  மின்னலைப் பார்த்ததில்லை. 

இரண்டு குழந்தைகளையும் இழுத்து அணைத்துக்கொண்டு , மவுனமாய்க் கிடந்தேன். பிரார்த்தனையைத்தவிர வேறு எந்த உபாயமும் தெரியவில்லை.  

ஒரு மைல் அகலத்திற்குச் சுருண்டு எழுந்துவரும் சூறாவளியை டிவியில் காட்டிக்கொண்டே  இருந்தார்கள். வினாடிக்கு வினாடி அது எவ்வாறு நகருகிறது என்பது அங்கே காட்டப்பட்டது. எங்கள் வீட்டிற்கு மிக அருகில் அது நெருங்கிவருகிறது. கண்களைக் கெட்டியாக மூடிக்கொண்டு, குழந்தைகளை இன்னமும் நெருங்கிப் பிடித்துகொண்டு கவிழ்ந்து படுத்துவிட்டேன். எண்ணம் முழுவதும் ஊழிக்கூத்தாடிய சிவனின் நாட்டியாஞ்சலி தான். "சிவ சிவ என்றிட   தீவினை மாளும்" என்கிற ஒற்றைவரி மட்டுமே நாவில் தொடர்ந்து வந்தது. 

விஞ்ஞானம் எங்கு நின்று விடுகிறதோ அங்கிருந்து தொடங்குவது மெய்ஞானம் என்றார் கண்ணதாசன்.  என் அறிவுக்கு எட்டிய  வரையில் இயற்கையின் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் விஞ்ஞான வழிமுறைகள் இல்லை. விஞ்ஞானம் எனைக் கைவிட்டது. ஆனால் எனைக் கைவிடாது தொடர்ந்தது மெய்ஞானப் பிரார்த்தனை மட்டுமே. எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை.

விடிந்ததும் சேதி. எங்கள் மாநிலம் ஜார்ஜியாவில் தான் மிகக்குறைவான உயிர்ச்சேதம். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது. நன்றி பெருமானே!!
 


 

  






Tuesday, April 26, 2011

திருக்குறளை ஒலி வடிவத்தில் தயாரித்து வெளியிடுகிறோம்

அம்பராத்தூணி நிறுவனம் தமிழ்ப் பணியில் மிகவும் பெருமை கொள்கின்றது. திருக்குறள் என்பது தமிழரின் அடையாளம். அதுவே நம்மை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, நமக்குப் பெருமை சேர்க்கின்றது. இனிமையான நமது தமிழ் மொழியில் ஒவ்வொரு குறளையும் பொருளோடு கேட்டு மகிழ்வதை நம் நேயர்கள் யாவரும்  விரும்புவார்கள்  என்பதால் திருக்குறளை ஒலிவடிவத்தில் வெளியிட்டு வருகிறோம். குறளின் பொருளைத் தமிழோடு  ஆங்கிலத்திலும் வழங்குகிறோம்.  

நமது அம்பராத்தூணி  இல்லமுகப்பில் (home page) வலப்புறப்  பட்டையில், இதற்கான வசதி பொருத்தப்பட்டுள்ளது.   இதனை இறக்கிக் கொள்ள cinchcast.com/ambarathoni செல்லுக.
 
 

விஞ்ஞானியாகுக: வினவுக --- எனது நூல் Become A Scientist: Ask the Right Sequence of Questions

விஞ்ஞானியாகுக: வினவுக --- எனது நூல்

Become A Scientist: Ask the Right Sequence of Questions  



சென்ற மாதம், ஜெர்மனியிலிருந்து, பெர்லாக் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது, 200பக்கங்கள் கொண்டது இந்நூல்.  

மிகச்சிறந்த கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தவேண்டுமெனில்,  விஞ்ஞானியானால் மட்டும் போதாது; செறிவான வினாத்தொகுதிகளை  எழுப்புதல் வேண்டும் அவற்றைப் பின்பற்றி நிறைவான ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும் என்கிற அடிப்படைத்தேவை இந்த நூலில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நூலுக்காய், நோபல் பரிசு பெற்ற  விஞ்ஞானிகள் பலருடனும் தொடர்புகொண்டு, உரையாடித் தகவல் பல சேர்த்து அவற்றின் மேல், ஆய்வு நிகழ்த்தியிருக்கிறேன்.

விஞ்ஞானி: ரிச்சர்ட்  ஸ்மாலி



இந்நூலை ரிச்சர்ட்  ஸ்மாலி எனும் பெரியவருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறேன்.  ஸ்மாலி நோபல் பரிசு பெற்ற  விஞ்ஞானி. புல்லரின் எனப்படும் புதுவகைக் கார்பனைக் கண்டு பிடித்த மூவரில் ஒருவர். எனது  பல கேள்விகளுக்கு மிகப் பொறுமையாய் வெகு திறமையாய், சலிக்காமல்-சளைக்காமல் பதிலிறுத்தவர். இப்போது அமரராகி விட்டார்.
  
பதிப்பிற்கு முன்பு  இந்நூலின் ஆய்வுப் படிவத்தைப் படித்தவரான, கனக்டிகட் லிவர்போர்ட் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் தாமஸ், தனது 35வருடக் கல்வி  மற்றும், ஆய்வு வாழ்க்கையில் இத்தனைத் தரமான ஆய்வை,  தான் கண்டதில்லை என்று சான்றுரைத்திருக்கின்றார்.       

கலிபோர்னியா ரிவர்சைட் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் டில்லன் அவர்கள்  உருவாக்கிய ஒரு வினாத்தொகுப்பை, விரித்தும், கிளைத்தும், அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கு அவற்றை  எவ்வாறு  பயன்படுத்துவது  என ஆய்ந்து; அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தியபோது, விஞ்ஞானிகள் எத்தகைய வினாக்களைத் தொடுத்தார்கள், என்பதை அறிந்து, அடிப்படை ஆய்வுகளுக்கு என ஒரு தொகுதியும், தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு என   ஒரு தொகுதியுமாக இந்நூலில் வினாத்தொகுதிகளை அமைத்து வழங்கியிருக்கிறேன்.

பேராசிரியர் டில்லன்
 
இவற்றை நோபல் பரிசு வென்ற பல ஆய்வுகளுக்கு அளித்து அக்கண்டுபிடிப்புக்களை மீண்டும் கட்டமைத்துக் காட்டியிருக்கிறேன்.

உலகில் நடக்கும் ஆய்வுகளில்  முப்பது விழுக்காடு ஆய்வுகள் "அரைத்த மாவை அரைத்து, கரைத்த மாவைக் கரைத்து" எனும்படியாக ஒருவர் செய்வதையே மற்றவர் செய்வதான சூழலில் போய்க்கொண்டிருக்கிறது. இது நல்ல போக்கா என்றால் இல்லை. அறிவியல் ஆய்வுகளுக்கு மிகுந்த அளவு   நிதி முதலீடு தேவைப்படுகிறது. அதுபோன்றே ஆய்வுகள் நிகழ்த்த அதிக அளவு ஆட்கள்  தேவைப்படுகிறார்கள். எனவே ஒருவர் செய்வதையே மற்றவர் செய்கின்றபோது, நிதி விரயத்தோடு, மனிதவளமும் விரயமாகிறது. அதுவும் வளரும் நாடுகளில், இத்தகைய  போக்கு மாபெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதாகிறது. எதைவேண்டுமானாலும் ஆய்வு செய்வது என்பது பணக்கார நாடுகளின் பொழுதுபோக்கு மனோநிலையாக இருக்கமுடியுமே தவிர, ஏழை நாடுகள் இவ்வாறான போக்கில் ஈடுபலாகாது.   

செய்யப்போகும் ஆய்வில் என்னென்ன செய்யப்போகிறோம் என்று ஒவ்வொரு அசைவிலும் திட்டமிடலும் தெளிந்த சிந்தனையும், முடிபும் இல்லாமல் ஆய்வில் இறங்குவது கூடாது. ஏனெனில் ஆய்வாளர்கள் எவரும் தனது சொந்தப்பணத்தில் ஆய்வுகள் நடத்துவதில்லை, கோடானுகோடி ஏழைகள்  அடிப்படைத்தேவைகளைத் துறந்து வாழும் நிலையில், இந்த ஆய்வின் மூலம் ஏதேனும் பயன்  விளைந்து இந்த நாடு முன்னேறிவிடாதா என்கிற ஆதங்கத்தில் அரசுகள் ஆய்வுகளுக்காய் நிதி ஒதுக்குகின்றன. எனவே ஒவ்வொரு நயா பைசாவையும் உருப்படியாகச் செலவு செய்வது என்பதும், அதுவும் அதனைக் காலத்தே விளையும் உருப்படியான ஆய்வுக்காக மட்டுமே செலவு செய்வது என்பதும் ஆய்வாளர்களின் கடைமையாகின்றது. அதேநேரத்தில் ஆய்வாளர்களுக்கு மிகச்சரியான வழிகாட்டுதல் இருக்குமேயானால் அவர்கள் சிறந்த கண்டுபிடிப்புக்களை உருவாக்கமுடியும். இவ்வகையில், எனது இந்த சிறுமுயற்சி ஆய்வாளர்களுக்கு, உகந்ததொரு வழிகாட்டியாக அமையும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது..

சமீபத்தில் நிகழ்ந்த இந்திய வம்சாவழியினருக்கான பன்னாட்டு  அவையின் (Global Organization for the People of Indian Origin; GOPIO) அட்லாண்டா கிளையின் துவக்கவிழாவிலே, இந்நூல் அறிமுகப் படுத்தப்பட்டது.   ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தலைமை அதிகாரி திரு சஞ்சீவ் அரோரா அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 




எனது நூல் அறிமுகப்படுத்தப்படுகிறது:  
பத்மினி சர்மா, நான், திரு சஞ்சீவ்  அரோரா  

இந்நூலுக்குப் பின்னே எனது உழைப்புக்கு உந்துசக்தியாக அமைந்தவர்கள் சென்னைப் பேராசிரியர் இராஜா கணேசன் மற்றும்  அட்லாண்டா டாக்டர் பத்மினி சர்மா. இவர்களுக்கு எனது வணக்கங்கள்.


பேராசிரியர் இராஜா கணேசன் 

 .
 
     



 
 

Sunday, April 24, 2011

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்: சாயி பாபா

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்: சாயி பாபா  

புரியாத புதிர் என்பார்கள்
புதிர் புரியாததா? புதிரைப் புரியாதவர்களா? 

சாயி பாபா எனும் இந்த அபூர்வமனிதர் புரியாத மனிதராகப் புகழுடம்புடன் வாழ்ந்து, எல்லோரைப்போலவே "இயற்கை"  எய்தியிருக்கிறார்.

அரசியலா, அறிவியலா, ஆன்மீகமா என்கிற பேதங்கள்  கடந்து  எவரும் மோகம் கொள்ளும் வசீகரத்தை இவர் எங்கனம் கற்றார்? - எவ்வாறு பெற்றார்?

நீண்ட அங்கியா? மூண்ட தலைமுடியா? கண்கட்டிச் சித்து விளையாட்டுக்களா?
இதில் எது இவருக்கு இத்தனை அங்கீகரிப்பை வளர்த்துவிட்டது?

ஜாம்பவான்களும் சாமானியர்களும் எது கண்டு இந்தமனிதரிடம் ஓடினார்கள்?
மாபெரும் மக்கள் கூட்டத்தைத் தனக்காய்த் திரட்டும் அரசியல் தலைவர்கள், எது திரட்ட இவரிடம் யாசகம் செய்தார்கள்?
தெளித்த திருநீற்றுக்கும், உமிழ்ந்த லிங்கத்திற்கும், விரற்கிடையில் உருவப்பட்ட ஒல்லிச் சங்கலிக்கும், ஆலாய்ப் பறந்தவர்கள்

பசுமை நிறைந்த வயல்களையும் 
வறுமை மறந்த ஜனங்களையும் 
உழைக்க விரும்பும் மனங்களையும் 
உத்தம அரசியல் தலைமையையும் 
பருத்த பசுவின் மடிகளையும்
கருத்த மேகக்குவியலையும்   
கற்பு துறக்காப் பெண்களையும்
கடமை வழுவா ஆண்களையும் 
நிலை நடுங்கா பூமியையும் 
குலை நடுங்கா குடும்பத்தையும் 

ஏன் கோரவில்லை?  ஏன் கோரவில்லை? 
எவரும் கோராமலே வரம் தரும் சாமி எனப் பெயர் பெற்றவராயிற்றே!
நல்லதொரு சமுதாயத்திற்கு இவையெல்லாம் தேவை என பாபா  அறியாதவரா என்ன?

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற  வாழ்வதற்கே!
எனக் கடவுளிடம் கதறினானே பாரதி - அந்தக் கதறல் இவர்முன் திரண்ட  மக்களின் காதில் ஒலிக்கவில்லையா?

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எவரின் பின்னோ ஓடிநிற்கும் போக்கில், கேட்கவேண்டியவற்றை எவரேனும் ஒழுங்காய்க் கேட்டிருந்தால் 
எவரிடம் என்ன வல்லமைஇருக்கிறது என்று எப்போதோ புலப்பட்டிருக்கும் அல்லவா?

கரிசனத்திற்கும், விமரிசனத்திற்கும், கடவுளை ஒத்த வழிபாட்டிற்கும். கர்த்தாவான சாயி பாபாவின் மகிமையைக் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.  


     


   


 
 
 







Monday, April 18, 2011

இசைவடிவில் பெரியபுராணம்

இசைவடிவில் பெரியபுராணம் 

சசிரேகாவிடமிருந்து எனக்கு வந்த அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ்நூல்.காம் வழங்கும் 
பெரியபுராணம்
குரலிசைக் குறுந்தட்டுப் பேழை

வரலாற்றில் முதல் முறையாக 
4274 பாடல்கள், 72 புராணங்கள் 
குரலிசை: ஓதுவார் பா. சற்குருநாதன்

விவரங்கள் காண்க:

திருத்தணியில் நடைபெற்ற 6ஆவது உலகச் சேக்கிழார் மாநாட்டில் இக்குறுந்தட்டுப் பேழை வெளியானது.
திருத்தணியில் வெளியீட்டுவிழாக் காட்சிகள் காண்க:

4274 பாடல்களின் குரலிசைப் பதிவை 
20 எம்பி3 குறுந்தட்டுகள் கொண்ட ஒரு தொகுதியாக
ஒரே பேழைக்குள் அமைத்துள்ளோம். 

அடக்க விலை - ரூ. 700

தேவைகளுக்கு அஞ்சல் முகவரியுடன் எழுதுக. அஞ்சல் செலவுடனான கூறுவிலை தருவோம்.

நன்றி
சசிரேகா
 


ஒரு மெழுகுவர்த்தியின் வேதிச் சரிதை - மைக்கேல் பாரடே

ஒரு மெழுகுவர்த்தியின் வேதிச் சரிதை - மைக்கேல் பாரடே 
இப்புத்தகம் பொதுச் சொத்தாகும், தமிழில் மொழிபெயர்க்கத் தடையில்லை. எவரேனும் இப்பணியில் முனைவார்களா?

ஞானிகள் - விஞ்ஞானிகள் - இவர்கள் எதனையும் உயர்நிலையில் நின்று பார்ப்பவர்கள்; பிறருக்குப் புரியாத உயர்நிலை மொழியில் பேசுபவர்கள் - விவாதிப்பவர்கள் என்று நாம் நினைப்பதுண்டு . நானும் கூட அவ்வாறானதொரு கருத்துடன் தான் இருந்துவந்தேன் இந்தப் புத்தகத்தைக் கேட்கும் வரை.

"எளிமை என்றால்  இதுவன்றோ எளிமை" எனும்படியாக  எழுதப்பட்டுள்ள
  இந்த  நூலின் ஆசிரியர், மைக்கேல் பாரடே .

மின்சாரமும் காந்தமும் இவரது சிறப்பு ஆய்வுத்துறைகள். அவற்றைப் பற்றிய விதிகள், விளக்கங்கள், கருவி வடிவமைப்பு என வாழ்ந்துபோனவர், எவருக்கும் தெரிந்த மெழுகுவர்த்தியைப் பற்றி எழுதியிருப்பார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அசந்து  போய்விட்டேன்.  அன்று  அவர் எழுதிய அந்தப் புத்தகம், இன்று ஒலிவடிவில் காணப்பெறுகிறது. 

சிறுவர்  முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டிப்போடும்,  எளிய சொற்கள், படிப்படியாய் வளரும் கதை என சுவாரஸ்யமாய், படிப்பவரை, "கைபிடித்து அழைத்துப்போகும்" அக்கறையுள்ள எழுத்தாளனை  நாம் அடையாளம் காண முடிகிறது. "கதைகதையாம் காரணமாம்" என்கிற இலகுவான தொனியில் பாரடே மெழுகுவர்த்தியின் கதையைக் கூறுவது, அறிவியல் கருத்துக்களை ஒருவரால் இத்தனை எளிதாகக் கூறமுடியுமா என நம்மைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ள வைக்கிறது. அவரது எழுத்துவன்மையை, ஒலிவடிவில் கேட்பது நாம் பெற்ற பேறு என்பேன்.
சொல்லபோனால், அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்தப் புத்தகம், எனவே  புத்தகத்தில் பாரடேவின் உயிரோட்டமான குரல் ஒலிப்பதை நன்றாய்க் கேட்கமுடிகிறது.     


தந்துகிக் கவர்ச்சி மூலம், மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிவதை அவர் விளக்கும்போது,  புரிநூல் திரியே மெழுகுவர்த்தியின் மதிப்பிற்குக்  காரணம் என்று பாரடே சொல்லும் பாங்கு கேட்குந்தோறும், கேட்குந்தோறும் நெஞ்சைக் கொள்ளை கொள்கிறது. 'திரியழல் காணின் தொழுவர்; விறகின் எரியழல்  காணின் இகழ்வர்" என்ற' மாணிக்கவரிகள்  நினைவுக்கு வந்தன. கல்வி என்பது கற்றோர் மனதையாண்டு,  அவரை  நெறிப்பட வாழும் தன்மையராய் வழிநடாத்துதல் என்பது  வெற்று  ஏட்டுச்சுரைக்காய்க் கல்வியால்  வந்துவிடாது. முறுக்கிபிழிந்து, கற்ற  கல்வியின் சாரத்தைப்  பட்டறிவால் இளக்கிப் , பதனப்படுத்துகின்றபோது மட்டுமே கல்வியின் வெளிச்சம் புலப்படும் என்று என் செவிக்குள் எவரோ திருத்தமாய்ச் சொன்னதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

இதுதான் பிரவண மந்திரமா?

செல்வத்துட்செல்வம் செவிச் செல்வம் என்று சும்மாவா சொன்னார்கள்?

மெழுகுவர்த்தியின்  சரிதையைக்கேட்டு நீங்கள் என்ன உணரப்போகிகறீர்கள்?
  
கேளுங்கள்  
 
http://www.archive.org/details/chemical_history_candle_ava_LibriVox

இது இலவசச் சேவை 
       இப்புத்தகம் பொதுச் சொத்தாகும், தமிழில் மொழிபெயர்க்கத் தடையில்லை. எவரேனும் இப்பணியில் முனைவார்களா?


  
 



Sunday, April 10, 2011

இவர் தேடுவது தீயின் நாக்கையா? அல்லது வறுமையின் நெற்றையா?

 இவர் தேடுவது தீயின் நாக்கையா? அல்லது வறுமையின் நெற்றையா?
  
மூண்ட தீயில் முழுவதும் போக, கரிக்குட்டையில் வாழ்க்கைத்துவக்கம் 

பிலிப்பைன் நாட்டில் மலபான் நகரத்தின் மக்கள் நெருக்கடியும், சுகாதரக்கேடுகளும் நிறைந்த, குப்பைமேட்டுக் குப்பம். அங்கே உள்ள அனைத்து வீடுகளுமே வெறும் அட்டைகளாலும்  டின்-தகரத்தாலும் மட்டுமே கட்டப்பட்டவை. 
கடந்த வியாழன் அன்று
 ஒரு வீட்டில் சமையல் வாயு சிலிண்டர் வெடித்ததால் அனைத்துவீடுகளுக்கும்  தீபரவ, தீயணைப்புப்படையினர் வந்து தீயை அணைத்ததால், குடியிருப்பு இருந்த இடத்தில்  அகழ்போல 
ஒரு குப்பைக் குட்டை உருவாகியுள்ளது.

தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் மக்கள் நூற்றுக்கணக்கில்; இவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிடுப்பவர்கள் 3000.

அக்குட்டையில் நீந்தித்துழவி இவ்விளைஞர் தேடுவதென்ன?

(அவர் தலைப்பாகையில் செருகப்பட்டுள்ள சிகரெட்டுகள், இந்தக் குப்பைமேட்டிலிருந்து எடுக்கப்பட்டவையாம்)
  




 

 
 
    

Saturday, April 9, 2011

சுகி சிவமும் நானும்: அவ்வைமகள்

சுகி சிவமும் நானும்: அவ்வைமகள்  

இது நடந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அன்று நான் சொன்ன வார்த்தைகள் - அவை  தப்பாமல் அப்படியே நிஜமாகி வந்திருக்கின்றன.

எஸ் ஐ ஈ டி கல்லூரியின் தமிழ் மன்றச்செயலாரக  நான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பதவி வகித்திருந்த இனிமையான கல்லூரி நாட்கள். எனது மேஜர் வேதியியல் ஆனால் எனக்கிருந்த தமிழார்வம், முதல்வரால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது.
மிசஸ்  க்வ்ஹரின்  ஆர்கானிக் கெமிஸ்ட்ரி வகுப்பு போய்க்கொண்டிருக்கிறது; முதல்வர் அழைக்கிறார் என்று ஆபீஸ் அட்டண்டர் வந்து கூப்பிடுகிறார். வகுப்பு என்னை ஒருமாதிரியாகப் பார்க்க, எனக்குள் படபடப்பு மிக அட்டண்டரின் பின்னால்  சென்று முதல்வர் அறையில் நுழைகிறேன்.

"ஒன்ன  காலேஜ் தமிழ் செக்ரட்ரியா போட்டிருக்கேன். தமிழ் மன்றம் சிறப்பா நடக்கணும் அதுக்கு நீ பொறுப்பு. புதுசா ஏதாவது பண்ணனும். கவனமாப் பண்ணனும். ஒரு துளி கூட இசகு பிசகா எதுவும் நடந்துவிடக்கூடாது. எதுவானாலும் எங்கிட்ட வந்து பேசி, அதுக்குப் பிறகு செய்."   

நான் ஏற்பாடு செய்த முதற்சொற்பொழிவு  சுகி சிவத்தினுடயது. இளமையும் கவர்ச்சியுமாக  அழகு மிகுந்த பெண்கள் நிறைந்த எங்கள் கல்லூரிக்கு இளமையும் அழகுமான, சுகி சிவம் வந்து  பேசியது ஒருவிதக் கிளுகிளுப்புதான். அதுவும் அந்நாளில், கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனது எங்கள் எஸ் ஐ ஈ டி கல்லூரி. அன்றைய நாளில்  சென்னையில் ஒரு  
பிரம்மாண்டமான உள் அரங்கு என்று பெயர் போன எங்கள் கல்லூரி உள்-அரங்கில், வழிந்த பெண்கள் கூட்டத்திற்கிடையே சுகி சிவம்.  

எனது வரவேற்புரையில், 

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள் - தந்தை பத்தடி பாய்ந்தால் பிள்ளை நூறடி பாயும் என்று இவரைப்  பார்த்துச் சொல்லத்தோன்றுகிறது."

"தந்தையையும் மிஞ்சும் சொல்வளத்தொடு  "தன்னை வெல்வார் எவரும் இல்லை எனும்படியான சொல்லின் செல்வராய்"  இத்தரணியில் இவர் வலம் வருவார் என்று என்னால் உறுதியாக் கூறமுடியும் ----  சொல் எனும் அற்புதக்கலையில்,  திறம்பட சிறந்து விளங்கும்,
கலை மாமணியான இவரை வரவேற்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்."    
 
நான் அன்று ஹேஷ்யம் கூறியவாரே சுகி சிவம் சொல்லின்செல்வரராகவும்,  
கலை மாமணியாகவும் மாறினார். வருடங்கள்  ஓடினாலும், தனது இளமைத்தோற்றத்தையும்,  குரல் வளத்தையும்,   இவர் பாதுகாத்துவருவது பாராட்டுதற்குரிய விஷயங்கள். பேஷ்! பேஷ்!!

எனக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமைகள் மூன்று: நாங்கள் இருவருமே தமிழர்கள்; பேச்சாளர்கள்-எழுத்தாளர்கள்; இருவருக்குமே கிருபானந்தவாரியாரும் குன்றக்குடி அடிகளாரும் உந்து சக்திகளாய்த்த் திகழ்ந்தவர்கள்/திகழ்பவர்கள் .

வேறுபாடு?
*நான் வேதி;  அவர் சட்டாம்பிள்ளை 
ஆய்வக மேடையிலே கலக்குவது என் தொழில்;
மக்கள் மேடையிலே கலக்குவது அவர் தொழில்!! 
அவரைப்போல பேச நம்மாலாகாதப்பா!
உண்மையை ஒழுங்கா ஒப்புத்துக்கொள்ளணும்!  இது சட்டம் பேசும் இடமல்லவா?


அவ்வைமகள் 
*நான் வேதியியல் பேராசிரியர்; அவர் சட்ட வல்லுனர்





 


 

Friday, April 8, 2011

சத்தமின்றி -சித்தமொன்றி : அன்னா ஹசாரே

சத்தமின்றி -சித்தமொன்றி: அன்னா  ஹசாரே

எவரும் இதனை எதிர்ப் பார்த்திருக்க மாட்டார்கள்.  கூச்சலும், குழப்பமும், கூத்தாட்டமும் நிறைந்த நம்மூர் அரசியலில், இத்தகையதொரு புரட்சி முளைக்கும் என்று எவரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

கத்தியின்றி, இரத்தமின்றி  சத்தியப்போர் என வருணிக்கப்பட்ட காந்தியடிகளின் புரட்சிக்கு அடுத்து, மற்றுமொரு சாதனைப் புரட்சி இங்கே கிளம்பியிருக்கிறது. இது குறுகிய காலத்தில் வளர்ச்சி கொண்டு புகழடையும் நோக்கத்திற்காக போடப்பட்டிருக்கிற  அரசியல் நாடகம் அல்லவென்பது கண்கூடு 
.

அஹிம்சா வழியில் இயங்கி வந்திருக்கிற அதிகப் பிரபலமில்லாத ஒரு முதியவரின் பின்னே   மாபெரும் ஜனத்தொகுதி திரண்டு நிற்கிறது என்றால்   மக்கள்  நமது அரசியல் மீதும் அரசியல் வாதிகளின் மீதும் எத்தனை வெறுப்படைந்து - நம்பிக்கையிழந்து போயிருக்கிறார்கள்  என்பது  வெளிப்படை. 

இன்று, அன்னா  ஹசாரே எனும் இந்த - சாதரண  மனிதரைக்கண்டு -  
படைபுடை சூழ, அரசியல் அரிதாரம் பூசி, ஊழல் சாம்ராஜ்ஜியம் நடத்திவரும் நமது தலைவர்களுக்கு,   நாடி நரம்பெல்லாம் நடுக்கம் கண்டு  போயிருக்கிறது.
   
அதர்மம் மலியும்போது அவதாரப் புருஷர்கள் தோன்றுவார்கள் என்று சொல்வதுண்டு. சத்தமின்றி -சித்தமொன்றி  மக்கள் யாவரும் இந்த மனிதரின் பின்னே எழும்பி நிற்பது, பாரதம் காணப்போகும் மறுமலர்ச்சியா?

சீர்திருத்த வித்துக்கள் முளைத்து எழும்போது அவற்றிற்கு, நீர் கட்டி, எரு அட்டி,  களைவெட்டி, அரண் கட்டிப் பாதுகாக்கவேண்டியது சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொருவரது கடமையுமாகும். இதிலே உமது பங்கு பணி? 

ஒன்று மட்டும் உறுதி!

மாற்றம் தேவை!
ஏமாற்றம் கண்டது போதும்!!






அன்னா  ஹசாரே


அவ்வைமகள்

  
 
 

மரணத்திற்குப் பின்னும் ஜீவிதம் சுஜாதாவின் பக்குவம்.

சுஜாதா: வாராதது போல வந்து .... 

ஜிகினா உலகத்தில் ஆரவாரம் இல்லாமல் வாழ்வது என்பது மிகப்பெரிய கலை. 
அதுவும் நடிப்பவர் பெண்ணா  ஆணா என்பது இதிலே ரொம்பவும் முக்கியம்.
"Show the person, I will tell you the rule" என்பார்கள். படைபலம், பின்னணி பலம், குடும்ப பலம் என்று பலப்பரிட் சை செய்தவாறு  இங்கே காரியங்கள் நடக்கும். இவ்வாறான பலப்பரிட்சை என்பது ஜிகினா உலகத்தில் நித்தியப் பரிட்சையாகும்.  நாளொரு போதும் புடம் போட்டுப் பார்க்கின்ற அக்கினிப் பரிட்சையிது.  இதனைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்தவேகத்தில், திரும்பிப் பார்க்காமல் ஓடியவர்களும், திரும்பி வரமுடியாத இடத்திற்குப் போனவர்களும் எத்தனையோ!

இந்தப் பெண்மணி எப்படி வந்தார் என்று தெரியாதபடி வந்தவர். அரசல் புரசல் வதந்திகளும், புளுகு மூட்டைகளும் தம்மைத் தீண்டி விடாதபடி தற்காத்து, ஊசலாட்டமான பிழைப்பில், உறுதியாய் நின்று குணச்சித்திர வேடங்களில், தனக்கென ஒரு பாணி, தனக்கென ஒரு பாதையென, பாந்தமாய் நடித்து, தனக்கென ஒரு வரலாற்றை வடித்துப் போயிருக்கிறார்.                 

மரணத்திற்குப் பின்னும் ஜீவிதம் சுஜாதாவின் பக்குவம்.  



Thursday, April 7, 2011

அரிஸ்டாட்டில்: ஏன்? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

ஏன்? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை 

வினாக்கள் - இவை எப்போது தோன்றின ஏன் தோன்றின எவ்வாறு தோன்றின என்று யாராலும் சொல்ல முடியாது. வினாக்கள்  எழுப்புவது மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமானதா பிற விலங்குகளுக்கும் இது  சாத்தியமா என நம் சிந்தனையைக் கொஞ்சம் கிளரினோமேயானால், மூளை அமைப்பு உள்ள விலங்குகள் யாவற்றிறிகும் இந்தத்திறன்   அமையப்பெற்றிருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. முதுகெலும்பு உள்ள விலங்குகளில் இது படிப்படியாக வளர்ச்சி பெற்று மனிதர்களாகிய நம்மிடத்திலே இது ஒரு உச்சஸ்தாயியில் இருக்கிறது என்கிற உருவாக்கமும் கிடைக்கிறது. . 

நமக்கு மொழி எனபது மிகப்பெரிய வரப்பிரசாதம், எனவே, விலங்குகளைப் போலல்லாமல்-  நாம் எண்ணுவதை நம்மால் அப்படியே சொல்லிவிடமுடிகிறது - எழுதமுடிகின்றது - பதிவுசெய்ய முடிகின்றது. 

வினாக்கள் பொதுவாக ஒற்றையாகப் பிறப்பதில்லை.  ஒருவினாவின் கரு முளைவிட்டதென்றால், அங்கே தொடர் சிருஷ்டியாக வேறு சிலவினாக்களும் பிறந்துவிடும்.   

இவ்வாறு ஒருவருக்கு வினாக்கள் தொகுதியாக வெளிப்படுகின்றதென்றால், அவர் சிந்தனை வளத்திலே, உயர்நிலைவகிப்பவர் என்று கொள்ளலாம்.


அரிஸ்டாட்டில் (கிமு 384 –322 )

இத்தகு உயர் சிந்தனையாளர் ஒருவரை நம் புவியரசி ஈன்றெடுத்தாள். அவர்தான் அரிஸ்டாட்டில்.  

நாம் எத்தனைக்  கேள்விகளைக் கேட்கமுடியும் என்றால், நமக்கு எத்தனைப்  பொருட்களைத் தெரியுமோ அத்தனைக் கேள்விகளை நாம் எழுப்பமுடியும் என்பது  அரிஸ்டாட்டிலின்  கூற்று.  இங்கு பொருட்கள் என்பதில் உயர்திணை மற்றும்  அக்றிணைப் பொருட்கள் யாவுமே  அடக்கமாகும்.

ஆனால் இவ்வினாக்கள் யாவற்றையும் நான்கே நான்கு வினாக்களுக்குள் அடக்கிவிடமுடியும்  என்பார்  அரிஸ்டாட்டில்.

 இதனை அவர் எத்தனை அழகாகக் கூறுகிறார் பாருங்கள்

ஒரு பொருள் உள்ளது என்று தெரிந்துவிட்டால், அதனது தன்மையை  நாம் வினவுகிறோம்,  அப்பொருள் இத்தன்மையது   என்று அறிந்துகொண்ட  பின் அதனது  விவரங்களை வினவுகிறோம். அடுத்து அது ஏன் அவ்வாறு உள்ளது என வினவுகிறோம்.
தனது போஸ்டீரியர் அனலிடிகா என்ற நூலில்  அரிஸ்டாட்டில் இவ்வாறு கூறியுள்ளார். இதோ பாருங்கள். 
Aristotle’s  schema of classification of questions.
No

Kind of Question

Categorial Label
1
Existence/Affirmation
When we ascertained the thing's existence
2
Essence/Definition
we inquire into its nature
3
Attribute/Description
when we know the fact
4
Cause/Explanation
we ask the reason

 

   

 
 



உங்களுக்குத் தெரியுமா? அரிசிச் சாராயம்

உங்களுக்குத் தெரியுமா? அரிசிச் சாராயம் 

அரிசி என்றால் நமக்கு நினைவுக்கு முதலில் வருவது சோறு. அடுத்து, இட்லி தோசை, ஆப்பம், அப்பம், கொழுக்கட்டை, அதிரசம், சீடை, முறுக்கு எனத் தின் பண்டங்களாக நம் கற்பனை நீளும்.  

அரிசியிலிருந்து போதை தரும் பானங்களும் தயாரிக்கிறார்கள் என்பதை நாம் அவ்வளவாக எண்ண ஓட்டத்தில் கூடக் கலந்திருக்க மாட்டோம்.

மது பானங்கள் திராட்சை ரசத்திலிருந்து மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்ற நினைப்பு வேறு நம்மில் பலரின் மனதிலே பதிந்திருக்கிறது.

ஆனால், அரிசியிலிருந்து முக்கிய சாராய வகையறாக்கள் தயாரிக்கிறார்கள்: இதோ பாருங்கள்!   

பசைத்தன்மை நிறைந்த அரிசியை ஊறவைத்து நொதிக்க வைப்பதன்  வாயிலாகத் தயாரிக்கப்படுவது "சேக்"  எனப்படும் மதுபானம். இதனை அரிசிச் சாராயம் என்கிறார்கள். சைனா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் விரும்பி  உட்கொள்ளப்படும்  மதுபானம் "சேக்" தான்.

ஊறுகாய் மற்றும் பிற உணவுப்பதார்த்தங்களைப் பாதுகாப்பதற்காக நாம் பயன்படுத்தும் வினிகர் எனப்படும் "காடி" (அசிடிக் அமிலம்)  அரிசி   நொய்யை ஊறவைத்து நொதிக்க வைப்பதன்  வாயிலாகத தயாரிக்கப்படுவது.

பிரபல மதுபானமான பீர்  அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கு  ஊறவைத்த அரிசி  நொய், மற்றும் ஊறவைத்து முளைகட்டிய  பார்லி ஆகியன  மூலப் பொருட்களாகும்.